tamilnadu

img

கவலையில் விவசாயிகள் - கண்டுகொள்ளாத அரசு

ஊரடங்கால் பாதிப்பு: பறிக்க ஆளில்லாமல் காய்ந்து வீணாகும் மிளகு, மிளகாய் 

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் போக்குவரத்து இல்லாததால் தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாமல் மிளகு, மிளகாய்கள் பறிக்கப்படால் காய்ந்து வீணாகின்றன. இதனால் மிளகு, மிளகாய் விவசாயிகள் பாதிக்க ப்பட்டு, கவலையில் உள்ளனர்.

பெரும்பாறை , தாண்டிக்குடி, மங்களங் கொம்பு கே.சி.பட்டி ,ஆடலூர், புல்லாவெளி, மஞ்சள் பரப்பு, பன்றிமலை, குப்பம்மாள் பட்டி, பெரியூர், பாச்சலூர் ஆகிய மலைப் பகுதி களில் கருப்பு மற்றும் வெள்ளை ரக மிளகுகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன .மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மிளகு எடுக்கும் சீசன் தொடங்கும் .ஜூன், ஜூலை மாதங்கள் இரண்டாவது சீசன் காலமாகும்.

தற்போது சீசன் தொடங்கி யுள்ளதால் கொடிகளில் மிளகு காய்த்து தொங்குகின்றன. ஊரடங்கு உத்தரவால் மலைப்பாதை மூடப்பட்டு ள்ளது. வாகனப் போக்கு வரத்து இல்லாததால் தொழிலாளர்கள் மிளகு தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. மிளகை விற்பனைக்கு அனுப்பி வைக்கவும் முடியவில்லை .விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே மிளகை பறித்து வருகின்றனர். பறித்த மிளகுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உரிய நிவாரணம் வழங்குக

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துப்பாண்டி என்பவர் கூறுகையில், கடந்த காலத்தில் கஜா புயலால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. இந்த மரங்களில் படர்ந்திருந்த மிளகு கொடிகள் பட்டுப் போயின. இதனால் மிளகு விளைச்சல் பாதியாக குறைந்தது. கடந்த காலங்களில் வெள்ளை மிளகாய் 1 கிலோ 1300 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் 500 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்த பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் பல விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு வருகிறோம். எங்கள் தோட்டத்தில் 25 பேர் பணி புரிந்தார்கள். தற்போது எங்கள் குடும்பத்திற்கே சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் எங்கள் தோட்டத்து தொழிலாளிகளுக்கு எங்களால் என்ன செய்ய முடியும் .அவர்கள் குடும்பமும் வாழ்வாதாரம் இல்லாமல் திகைத்து நிற்கின்றன. பறிக்க ஆளில்லாமல் கொடிகளில் மிளகு காய்ந்து வீணாகிறது.எனவே தமிழக அரசு  உரிய நிவாரணம் வழங்கி எங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ரூ.30 கோடி மிளகாய் வீணாகிறது

இது குறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் என்.பெருமாள் கூறியதாவது: தாண்டிக்குடி, பெரும்பாறை பகுதிகளில் மிளகாய் விவசாயிகள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரமே இந்த மிளகாயை நம்பி த்தான் உள்ளது. இங்குள்ள மிளகாயை தரம் பிரித்து கமிஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் .அங்கிருந்து மதுரை, விருதுநகர், சிவகாசி, திருச்சி மற்றும் கேரளா, கர்நாடகா ,தில்லி ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.  மலையில் இருந்து கீழே கொண்டு வருவதற்கு காவல்துறை இடையூறு செய்யக் கூடாது, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகமும்  இடையூறு செய்யக் கூடாது. 144 தடை உத்தரவால் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான மிளகாய் இப்பகுதியில் பறிக்க ஆளில்லாமல் வீணாகிறது .இவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க வேண்டும். மிளகாய் பறிக்கும் போது கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்த விவசாயிகள் மிளகாய் பறிக்காமலே தற்போது கண்ணீர் சிந்தும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவே தமிழக முதல்வர் மிளகாய் விவசாயிகளின் துயரைத் துடைக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

- ம.ஹரிஹரன்